சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மக்கள் எவ்வித இடையூறுமின்றி தமது சொந்த ஊர்களுக்குச் செல்வதை உறுதிப்படுத்தும் வகையில், விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறையில் இருக்கும்.
இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்துச் சபைகள் இணைந்து நாளாந்தம் 800 மேலதிக பேருந்து பயணங்களை முன்னெடுக்கவுள்ளன.
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து விசேட தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இக்காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் சுமார் 15 இலட்சம் பயணிகள் பேருந்து மற்றும் தொடருந்து நிலையங்களுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேருந்து நிலையங்களில் சுகாதாரம், முதலுதவி மற்றும் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மேலதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் 24 மணிநேர நடமாடும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முறைப்பாடுகளை மேற்கொள்ள பயணிகள் 1955 எனும் அவசர இலக்கம் அல்லது 0712595555 எனும் வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
