கணேமுல்லே சஞ்சீவ கொலை வழக்கின் 15ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி என்பவரே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
கடந்த மார்ச் 29ஆம் திகதி இவரது பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு கேக் ஒன்று கிடைத்துள்ளது.
குறித்த கேக்கில் ஏதேனும் விஷ இரசாயனங்கள் அல்லது போதைப்பொருள் கலக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த காவல்துறையினர், குறித்த கேக்கை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைத்து அறிக்கை பெறுவதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரினர்.
சந்தேகத்துக்குரிய கேக்கை உடனடியாக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட மேலதிக நீதவான், இது தொடர்பான விசாரணை அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் காவல்துறைக்கு கட்டளையிட்டார்.
சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி முதலில் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தற்போது மேலும் 90 நாட்கள் அவரைத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இவருடன் தொடர்புடைய விசாரணைகளை விரைவுபடுத்தி, இவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் கடந்த வாரம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
