ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) பெயரையும், அதன் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தையும் பயன்படுத்தி நிதி மோசடிகள் மற்றும் தனிநபர் தகவல்களைத் திருடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தத் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அழைப்பு மைய இலக்கத்தைப் போன்றே தோற்றமளிக்கும் +94115226126, +0115226126 ஆகிய எண்கள் மற்றும் 0771167739, 0742756098 ஆகிய கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொதுமக்களைத் தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள், அவர்களை ஏமாற்றித் தகவல்களைப் பெற்று வருவதாகத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்க இலச்சினையைப் பயன்படுத்தி ஒரு போலிச் செயலியை உருவாக்கியுள்ள மோசடியாளர்கள், அதன் மூலம் டிஜிட்டல் அடையாள அட்டை அல்லது ஈ-அடையாள அட்டைக்கான (e-NIC) பதிவுகளை மேற்கொள்வதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.
இவ்வாறான எந்தவொரு பதிவுகளையும் தமது திணைக்களம் தொலைபேசி வாயிலாகவோ அல்லது செயலி மூலமாகவோ முன்னெடுப்பதில்லை என்பதை ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள https://drpgov-lk[.]com என்ற போலி இணையதள முகவரியையோ அல்லது சந்தேகத்திற்குரிய தொலைபேசி அழைப்புகளையோ நம்பித் தனிநபர் விபரங்களை வழங்க வேண்டாம் எனப் பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி வலைப்பின்னல்களில் சிக்கி பணத்தையோ அல்லது தனிப்பட்ட தகவல்களையோ இழக்காமல் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
