அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று (09) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.
பயனாளிகள் தங்களுக்குரிய கொடுப்பனவுகளை எவ்வித சிரமமுமின்றி பெற்றுக்கொள்ளத் தேவையான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கொடுப்பனவுகள்
பயனாளிகள் தத்தமது பிரதேசங்களுக்குரிய அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று இந்தக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இக்கொடுப்பனவு விநியோகம் இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி வரை வழங்கப்படும்.
எதிர்வரும் காலங்களில் கொடுப்பனவு நடைமுறையில் பாரிய மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. 2026 ஜூன் மாதம் முதல், பயனாளிகளுக்கான அனைத்துக் கொடுப்பனவுகளும் வங்கி கணக்குகளின் ஊடாக மாத்திரமே வழங்கப்படும்.
பணப் பரிமாற்றங்களை இலகுபடுத்தவும், உரிய பயனாளிகளுக்கு நிதி நேரடியாகச் சென்றடைவதை உறுதிப்படுத்தவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை வங்கி கணக்குகளை ஆரம்பிக்காத பயனாளிகள், உரிய காலப்பகுதிக்குள் கணக்குகளை ஆரம்பித்து அதனை உறுதிப்படுத்துமாறு முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் கோரியுள்ளார்
