TAMIL VIRAL MEDIA

பாடசாலைக்கு வரும் புதிய தடை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

 

பாடசாலை உணவகங்களில் சில உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்குத் தடை விதித்து சுகாதார அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஹொட் டொக், பர்கர், பீட்சா, பிஸ்கட், கேக், கார்பனேற்றப்பட்ட பானங்கள், பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகள் மற்றும் பைக்கற்றுக்களில் அடைக்கப்பட்ட பானங்கள் உள்ளிட்ட அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய ஊட்டச்சத்துப் பிரிவு நிபுணர் வைத்தியர் மோனிகா விஜேரத்னே, பாடசாலைகளில் உணவகங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு வழிகாட்டுதல் கையேடும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வரும் அதிக எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டின் உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான மாணவர் சுகாதாரக் கணக்கெடுப்பின்படி, 13 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 12 வீதம் பேர் அதிக எடையுடனும், 3 வீதம் பேர் உடல் பருமனுடனும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாடசாலை சிற்றுண்டிச்சாலை

மேலும், இந்த ஆய்வின்படி 17.4 வீத சிறுவர்கள் கார்பனேற்றப்பட்ட பானங்களையும், 28.5 வீதத்தினர் அதிக உப்புள்ள உணவுகளையும், 29 வீதத்தினர் அதிக கொழுப்புள்ள உணவுகளையும், 41 வீதத்தினர் அதிக சர்க்கரையுள்ள உணவுகளையும் வழக்கமாக உட்கொள்வது தெரியவந்துள்ளது.

எனவே, பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கு, பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளைத் திறம்பட ஒழுங்குபடுத்துவதும் கண்காணிப்பதும் இன்றியமையாதது என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.