சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் போஷணை உணவு வேலைத்திட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்
பகல் உணவு வழங்கும் 7000 பாடசாலைகள் பாதிப்பு
1.6 மில்லியன் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது சுமார் 7000 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு மாணவருக்கான மதிய உணவை வழங்குவதற்காக 110 ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தாலும் எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினால் மாணவர்களுக்கு சத்தான உணவை வழங்குவதற்கு அந்தத் தொகை தற்போது போதுமானதாக இல்லை என வழங்குனர்கள் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாடசாலைகளுக்கு மதிய உணவை வழங்கும் வழங்குனர்கள் பெரும்பாலானோர் சமுர்த்தி பயனாளிகள் என்பதால் இவ்வாறான விலை உயர்வை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாமல் போயுள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதன் காரணமாக மாணவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பது நிச்சயமற்ற ஒன்றாக மாறும் என்பதால் இது குறித்து அவதானம் செலுத்தி மதிய உணவிற்காக ஒரு மாணவருக்கு ஒதுக்கப்படும் தொகையை அதிகரிக்குமாறு கல்வி அமைச்சுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
