இலங்கையில் பெரும் சோகம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் பலி
புத்தாண்டு விடுமுறையில தெதுரு ஓயாவில் நீராட சென்று 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததால், அப்பகுதி ஆள் நடமாற்றமில்லாத நகரமாக மாறியுள்ளது.
உயிரிழந்தவர்கள் கடவத்தை மற்றும் கோபைகனேயின் தாதவெல பகுதியைச் சேர்ந்தவர்களாகும் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்கள், மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவதாக பொலஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், நீரில் மூழ்கியதில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு பெண்ணும் ஒரு ஆணும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் பலி
உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 9, 13, 18, 39, 70 மற்றும் 72 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவினர் 16ஆம் திகதி உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் மாலையில், 15 பேர் கொண்ட குழுவினர், தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்றனர்.
அந்த 15 பேர் கொண்ட குழுவினர் சதுப்பு நிலத்திற்குச் சென்று குளித்துக் கொண்டிருந்த போது, உடனடியாக நீரில் மூழ்கத் தொடங்கினர்.
அந்த நேரத்தில், அப்பகுதி மக்களும் பொலிஸாருக்கும் கடற்படைக்கும் தகவல் தெரிவித்தனர். கடற்படை வரும் வரை, அப்பகுதி மக்கள் நீரில் மூழ்கிய குழுவினரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அக்குழுவில் 7 பேர் மீட்கப்பட்டனர், ஆனால் மேலும் 8 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயினர். பின்னர், கடற்படையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, அவர்கள் படகில் சென்று நீருக்கடியில் காணாமல் போனவர்களின் உடல்களை மேற்பரப்பிற்குக் கொண்டு வந்தனர்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடி மகிழச் சென்ற எங்களுக்கு இப்படி ஒன்று நடக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை, என நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் கண்ணீருடன் கூறினார்.
புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடிக்கொண்டிருந்த எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? என்று மற்றொரு உறவினர் கதறி அழுதார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த எட்டு பேரின் மரண விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை நேற்று நிக்கவெரட்டிய மருத்துவமனையில் நடத்தப்பட்டது.
