தமிழகத்தில் மீண்டும் தேர்தல் களமா? மீண்டும் மக்களை சந்திக்க தயாராகும் விஜய்
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பதற்கு இன்றைய தினத்துக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் மக்களிடமே சென்றுவிடுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக முதல்வர் பதவி ஏற்பு இழுபறி நீடிப்பதால் விஜய் விரக்தி அடைந்துள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஆட்சியே வேண்டாம், யாருக்கும் அடிமையாக இருக்க தான் விரும்பவில்லை என்றும் பதவிக்காக யார் காலிலும் விழ தயாரில்லை என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஆட்சி அமைப்பதற்காக மீண்டும் மக்களிடமே தான் செல்வதாகவும் விஜய் உரத்த குரலில் கூறியுள்ளதாக தமிழக வெற்றிக் கழக தரப்புகள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரும்பான்மை கிடைக்கும் என்று தான் நம்பிய போதிலும், அது கொஞ்சம் குறைந்து விட்டதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்
தன்னை போலவே ஜாதி, மத, ஊழலுக்கு எதிரான மனநிலை கொண்ட சிறு கட்சிகள் ஆதரவு தரும் என எதிர்பார்த்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் பதவியை எதிர்பார்க்காமல் ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆதரவு தருவதாக கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் கூறியுள்ள திருமாவளவன், நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை முன்வைப்பதாகவும் அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசியல் பற்றி தனக்கும் தெரியும் என்றாலும், மக்களின் தீர்ப்பு வழங்கிய போதிலும், எல்லோரும் தனக்கு எதிராக அணி திரள்வார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை என்றும் என விஜய் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆட்சி அமைப்பதற்கு முன்பே ஆயிரம் நிபந்தனை விதிப்பவர்கள், பதவி பிரமாணம் எடுத்த பிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை நினைத்தால் பயமாக இருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஒரு ஆட்சி அமைக்க வேண்டுமா? அதற்கு இராஜினாமா செய்துவிட்டு, தமிழக மக்களிடமே மீண்டும் சென்று முழு ஆதரவையும் கோரலாமே என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது ஆலோசகர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதற்கு பதிலளித்த ஆலோசகர்கள், அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று விஜயிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
