மாணவர்களுக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
மனனம் செய்யும் பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறையிலிருந்து விடுபட்டு, நடைமுறை மற்றும் திறன்கள் நிறைந்த புதிய கல்விச் சீர்திருத்தச் செயல்முறையை நாட்டிற்கு அறிமுகப்படுத்தி வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பலாங்கொடை வித்யாலோக வித்யாலயாவில் நேற்று (04) நடைபெற்ற 'கண்காட்சியைத் திறந்து வைக்கும் மற்றும் மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 2027 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கான அனைத்து ஆரம்பகட்ட ஆயத்தங்களும் தற்போது மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் நிறைவு செய்யப்பட்டு வருவதாக அவர் வலியுறுத்தினார். பாடசாலையிலிருந்து உலகிற்குச் செல்லும் ஒவ்வொரு பிள்ளைக்கும் தங்களின் உள்ளார்ந்த திறமைகளுக்குப் பொருத்தமான, தொழில் சந்தையில் அதிக தேவையைக் கொண்டுள்ள தொழில்முறை மற்றும் தொழில்நுட்பப் பயிற்சியை வழங்குவது அரசாங்கத்தின் கட்டாய இலக்காகும். பல்கலைக்கழகக் கல்வியைப் போலவே, தொழிற்கல்வியையும் சமமான மரியாதையும் மதிப்பும் கொண்ட ஒரு துறையாக மாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார். உலகை ஆக்கப்பூர்வமாகவும் விமர்சன ரீதியாகவும் பார்க்கக்கூடிய திறமையான பிள்ளைகள் நம்மிடம் இருப்பதாகவும், அவர்களைப் புதிய தொழில்நுட்பம் மற்றும் அறிவுடன் மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் பிரதமர் மேலும் கூறினார்.
