வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்! அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
வாகன இறக்குமதித் துறையின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்கும், இறக்குமதியாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் இருவருக்கும் ஆதரவளிப்பதற்கும் தேவையான கொள்கை திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையானது, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) துணைத் தலைவர் அரோஷ ரொத்ரிகொவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய வாகன நிதி மற்றும் இறக்குமதி நடைமுறைகள் தொடர்பான கட்டுப்பாடுகள் சந்தையின் செயல்திறனையும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்புகளையும் கடுமையாக பாதிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன இறக்குமதிக்கு 50% கூடுதல் வரி விதிக்கப்பட்ட போதிலும், பல மாதங்களுக்கு முன்பே செய்யப்பட்ட முன்கூட்டிய ஓர்டர்களின் காரணமாக வாகனங்கள் தொடர்ந்து நாட்டிற்கு வந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், வாகன மதிப்பில் 40% வரை மட்டுமே லீசிங் வசதி வழங்கப்பட வேண்டும் என்ற மத்திய வங்கியின் கட்டுப்பாடு வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனைக் குறைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இதற்கு மாற்றாக, வாகனங்களை இறக்குமதி செய்யும் போதே கடன் கடித (L.C.) விளிம்புநிலை முறையைக் கொண்டு வரலாம் என அவர் பரிந்துரைத்துள்ளார்.
மேலும், துறைமுகங்களில் இருந்து வாகனங்கள் விடுவிக்கப்படும் போது செலுத்தப்படும் வரிகள், அரசாங்கத்தின் அன்றாட பொதுச் செலவினங்களைச் சமாளிப்பதற்கான வரி வருவாயில் மிக முக்கியப் பங்காற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
